“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு,
“ஈரான் உடனான அமைதிப் பேச்சு சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் செல்லக்கூடும். அங்கு நான் இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் பணி சிறப்பானது. இந்த பேச்சுவார்த்தை இப்போது சரியான திசையில் உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும், அதன் விலை குறையும், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும்.
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. இதில் அணு ஆயுதமும் உள்ளடங்கியுள்ளது.” – என்றார்.
இதுவரை ஐந்து அமெரிக்க ஜனாதிபதிகள் மட்டுமே தங்கள் பதவி காலத்தில் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
கடைசியாக கடந்த 2006-ல் இஸ்லாமாபாத் நகருக்கு ஜார்ஜ் புஷ் சென்றிருந்தார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





