மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவினாலும் மின்சாரம், எரிபொருள் விநியோகம் இலங்கையில் தடையின்றி நடக்கும் – நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“உலக சந்தையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் தாக்கம் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் என்பதால், எரிபொருள் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், அவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டாலும், அது பாரிய அளவிலான சுமையாக இருக்காது.

விலையேற்றத்தின் பெரும்பகுதிச் செலவை அரசாங்கத் திறைசேரியே பொறுப்பேற்கும். அதன் முழுமையான சுமையை பொதுமக்கள் மீது சுமத்தாமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தணிந்து வழமை நிலை திரும்பியவுடன், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையைக் குறைக்கவே அரசு எதிர்பார்க்கின்றது.” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*